குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், திருநாவலூர், சிட்டங்காடு, பரவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-07-09 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், திருநாவலூர், சிட்டங்காடு, பரவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டு வரும் குடிநீர் வினியோகம் மற்றும் குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் மட்டும் 725 குடிநீர் திட்டப்பணிகள் ரூ.27 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 525 குடிநீர் திட்ட பணிகள் ரூ.17 கோடி மதிப்பீட்டில் முழுவதுமாக முடிக்கப்பட்டு உள்ளதுடன், மீதமுள்ள பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இதேபோன்று காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு 72 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 2019-20-ம் நிதியாண்டில் இதுவரை 5 குடிநீர் திட்ட பணிகள் ரூ.73 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றார். இந்த ஆய்வின்போது அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கார்த்தியாயினி, பிரேமாவதி, உதவி பொறியாளர் வேல்முருகன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்