கள்ளக்குறிச்சி அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து வந்தனர். இதன் காரணமாக அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதிலை கூறவில்லை. மேலும் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அங்குள்ள சாலையில் காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிநீர் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி-மலைக்கோட்டாலம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.