நாட்டறம்பள்ளி அருகே, குடிநீர் கேட்டு அரசு பஸ் சிறைபிடிப்பு

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு அரசு டவுன் பஸ் சிறைபிடிக்கப்பட்டது.

Update: 2019-07-09 22:45 GMT
நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளியை அடுத்த கத்தாரி ஊராட்சியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 6 மாதமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பெண்கள் நீண்ட தூரம் நடந்து சென்று விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அந்த வழியாக நாட்டறம்பள்ளி சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். மேலும் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டிராக்டர் மூலம் போதிய குடிநீர் கிடைக்க ஆவன செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்