திருமணமாகி ஒரு மாதத்தில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை

திருமணமாகி ஒரு மாதத்திலேயே இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-07-10 22:00 GMT
வடுவூர்,

வடுவூர் அருகே உள்ள செருமங்கலம் கக்கன் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 30). இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கும், ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு கீழையூரை சேர்ந்த நந்தினி (27) என்பவருக்கும் கடந்த மாதம் 14-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனதில் இருந்தே கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நந்தினி வீட்டினர் வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளை பிரகாஷ் விற்க முயன்றார். இதனால் பிரகாசுக்கும், நந்தினிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது நந்தினி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் மற்றும் வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி ஆகியோர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நந்தினியின் தாய் தவமணி கொடுத்த புகாரின்பேரில் வடுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசிடம் விசாரணை மேற்கொண்டனர். நந்தினிக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியக்கோட்டி, மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்