யூனியன் அலுவலகத்தில் குவிந்து கிடந்த மதுபாட்டில்கள் அதிகாரிகளுக்கு கலெக்டர் கண்டிப்பு

யூனியன் அலுவலகத்தில் குவிந்து கிடந்த மதுபாட்டில்களை கண்டு அதிகாரிகளை செல்போனில் அழைத்து கலெக்டர் கண்டித்தார்.

Update: 2019-07-11 22:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை தொடங்கி வைக்க வந்த கலெக்டர் வீரராகவ ராவ் அருகில் இருந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மரக்கன்று நடுவதற்காக சென்றார். அங்கு கட்டிடத்தின் ஓரத்தில் மரக்கன்று நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை கண்ட கலெக்டர் வீரராகவராவ் பயன் உள்ள வகையில் மரக்கன்று நடவேண்டும், இதுபோன்று கட்டிடத்தின் ஓரத்தில் நட்டுவைத்தால் மரமும் பாதிக்கப்படும், கட்டிடமும் விரிசல் ஏற்பட்டு பாதிக்கப்படும் என்று எச்சரித்து மாற்று இடம் தேர்வு செய்ய உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மாற்று இடம் தேர்வு செய்த சமயத்தில் கலெக்டர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் சென்றார். அங்கு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பணியில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக வருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். யூனியன் அலுவலக வளாக பகுதியில் சுற்றிப்பார்த்த கலெக்டர் அந்த பகுதி முழுவதும் குப்பைகளாக இருந்ததை கண்டு அதனை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மழைநீர் சேகரிப்பு தொட்டியில் குப்பைகளும், பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகஅளவில் இருந்தது. மற்றொரு தொட்டியில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் மற்றும் டம்ளர்கள், பிளாஸ்டிக் பைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அரசு அலுவலகமா?, மதுபான கூடமா? என்று அதிகாரிகளை செல்போனில் அழைத்து கண்டித்தார். அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட யூனியன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

மேலும் செய்திகள்