திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2019-07-12 21:30 GMT
நெல்லை, 

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இளம்பெண் கற்பழிப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு கீழபத்தை வடக்கு தெருவை சேர்ந்தவர் கனி மகன் நம்பிராஜன் (வயது 26). இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை காட்டி கற்பழித்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் நம்பிராஜனிடம் வலியுறுத்தினார்.

ஆனால் இதற்கு மாறாக நம்பிராஜன் அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து உள்ளார். இதுதொடர்பாக கேட்ட போது நம்பிராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணை மிரட்டியதாக கூறப்படுகிறது.

10 ஆண்டு சிறை

இதுதொடர்பாக அந்த பெண் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நம்பிராஜன், அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 5 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து நம்பிராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 லட்சமும், அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் பால்கனி ஆஜரானார்.

மேலும் செய்திகள்