திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி போலீசார் ரோந்து

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில், சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தியபடி போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.

Update: 2019-07-12 22:30 GMT
திருச்சி, 

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் ஜங்ஷன் ரெயில் நிலையம் எந்நேரமும் பயணிகளின் கூட்டத்தால் பரபரப்புடன் இருக்கும். ரெயில் பயணிகளிடம் சிலர் நல்லவர்கள்போல் நடித்து பிஸ்கட் போன்ற உணவு பொருட்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடைமைகளை திருடி செல்லும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதேபோல் தடை செய்யப்பட்ட பொருட்களை ரெயில் நிலையத்துக்குள் எடுத்து செல்வது போன்ற குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.

இதனை கட்டுப்படுத்தும் வகையில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சீருடையில் கண்காணிப்பு கேமரா பொருத்திக் கொண்டு ரோந்து செல்லும் திட்டம் தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, நெல்லை, சேலம், கோவை ஆகிய ரெயில் நிலையங்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 30 கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் சென்னையை தவிர பிற ரெயில் நிலையங்களுக்கு தலா 2 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கேமராவில் பதிவாகும் பதிவுகள் ஒருவாரம் வரை சேமிக்கப்படும்.

திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சுழற்சி முறையில் இந்த பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அன்றைய தினம் பணியில் ஈடுபடும் போலீசார் கேமராவில் பதிவான காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் உள்ள கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து வைக்க வேண்டும். ஒரு மாதம் முதல் 3 மாதம் வரை இந்த பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டு பின்னர் அழிக்கப்படும். இதில் பதிவாகும் காட்சிகளை போலீஸ் நிலையத்தில் உள்ள அதிகாரிகளே நேரடியாக பார்க்கும் வசதி விரைவில் கூடுதலாக சேர்க்கப்பட உள்ளது.

இந்த வகை கேமராக்கள் வரும் நாட்களில், ஓடும் ரெயில்களில் பாதுகாப்புக்கு செல்லும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ரெயில் நிலையங்களில் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் விதிமுறைகளை மீறுவோர் அடையாளம் காணப்படுவார்கள்.

இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெரும்பாலும் பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்துவதை போலீசார் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகையால் ரெயில் நிலையத்தில் திடீரென ஏதாவது அசம்பாவித சம்பவம் நடைபெற்றால் அதனை செல்போனில் பதிவு செய்யும்போது தவறுதலாக சமூக வலைதளங்களிலும் பரவி விடக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இதுபோன்ற கேமராக்களில் பதிவு செய்தால் எந்த பிரச்சினையும் இல்லை. மேலும், தேவையான காட்சிகளை மட்டும் வைத்து கொண்டு மற்றவைகளை அழித்துவிடலாம்” என்றார்.

மேலும் செய்திகள்