ஆலங்குளம் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; புதுப்பெண் சாவு கணவர் படுகாயம்

ஆலங்குளம் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயமடைந்தார்.

Update: 2019-07-13 21:30 GMT
ஆலங்குளம், 

ஆலங்குளம் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் புதுப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் படுகாயமடைந்தார்.

பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 27). கூலி தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பனையங்குறிச்சியை சேர்ந்த தமிழ்ச்செல்வி (25) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்கள் தற்போது மானூரில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன், மனைவி 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆலங்குளம் அருகே புதூரில் உள்ள தமிழ்ச்செல்வியின் அண்ணன் வீட்டிற்கு சென்றனர்.

பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் 2 பேரும் பனையங்குறிச்சி திரும்பினர்.

புதூர் அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக ராஜேஷ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

புதுப்பெண் பரிதாப சாவு

இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேசுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்