ஊத்துக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் இருந்த 60 பவுன் நகை திருட்டு

ஊத்துக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த 60 பவுன் நகை திருடப்பட்டது.

Update: 2019-07-13 22:15 GMT
ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்துள்ள தாராட்சி கிராமத்தை சேர்ந்தவர் அஜீம்பாய் (வயது 55) விவசாயி. இவர் நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டையில் உள்ள வங்கி லாக்கரில் இருந்து 60 பவுன் தங்க நகைகளை எடுத்து ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள் இருக்கைக்கு கீழே உள்ள பெட்டியில் வைத்து கொண்டார். வழியில் வங்கியின் எதிரே உள்ள எலெக்ட்ரிக்கல் கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். கடையில் எலெக்ட்ரிக்கல் பொருட் கள் வாங்கி கொண்டு வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளின் இருக்கையின் கீழே உள்ள பெட்டிக்கான பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பெட்டியை திறந்து பார்த்த போது அதில் இருந்த 60 பவுன் தங்க நகை மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது. இது குறித்து அஜீம்பாய் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். எலெக்ட்ரிக்கல் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களின் ஒருவர் அஜீம்பாயின் மோட்டார் சைக்கிள் பெட்டியின் பூட்டை உடைத்து நகை பையை திருடுவதும் பின்னர் அவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வதும் பதிவாகி இருந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்