திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் சுங்கச்சாவடி திறக்கப்பட்டு கட்டணம் வசூல்; வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு

திருப்புவனம் அருகே நான்கு வழிச்சாலையில் புதிதாக சுங்கச்சாவடி மையம் திறக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்வதற்கு வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-13 22:30 GMT
திருப்புவனம்,

மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு தற்போது போக்குவரத்து நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனம் அருகே உள்ள திருப்பாச்சேத்தி மற்றும் போகலூர் ஆகிய இரு இடங்களிலும் டோல்கேட் என்று அழைக்கப்படும் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இது செயல்படாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி திறக்கப்பட்டு அந்த வழியாக வந்த வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிகிறது. மேற்கு வங்காளத்தை சேர்ந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இந்த கட்டண வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அந்த வழியாக சென்ற அரசு பஸ்களை நிறுத்தி கட்டணம் கேட்டதாக தெரிகிறது. ஆனால் அரசு பஸ் டிரைவரும், கண்டக்டரும் கட்டணம் தர மறுத்து விட்டனர்.

மேலும் அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் கட்டணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சுங்கச்சாவடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுங்கச்சாவடி நிலைய ஊழியர்களுடன் வாகன ஓட்டிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சுங்கச்சாவடி மையத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் கூறுவதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து அங்கு வந்த திருப்பாச்சேத்தி போலீசார் வாகன ஓட்டிகளை சமரசம் செ ய்தனர். அதன் பின்னர் அரசு பஸ்கள் மட்டும் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் கனரக வாகனங்கள் சுங்கச்சாவடி பகுதியில் நீண்டவரிசையில் நின்றன.

மேலும் செய்திகள்