விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் திறப்பு: விழா ஏற்பாடுகளை சரத்குமார் பார்வையிட்டார்

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் திறப்பு விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை சரத்குமார் பார்வையிட்டார்.

Update: 2019-07-13 23:15 GMT
விருதுநகர்,

விருதுநகரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்தலைவர் காமராஜர் கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறங்காவலரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார், பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளார். மேலும் அங்கு திருவுருவச் சிலையையும் நிறுவியுள்ளார். மேலும் இந்த வளாகத்தில் அணையா தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த மணிமண்டபத்தினை நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி அளவில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து திறந்துவைக்கிறார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராதிகா சரத்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மணிமண்டப வளாகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர்கள் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதற்கிடையே நேற்று சரத்குமார், காமராஜர் மணிமண்டப வளாகத்திற்கு வருகை தந்தார். விழா ஏற்பாடுகள் குறித்து அங்கிருந்த தொழில்நுட்ப நிபுணர்களுடனும், விழாக்குழுவினருடனும் ஆலோசனை நடத்தினர். இதனைத்தொடர்ந்து விழா ஏற்பாடுகளை அவர் பார்வையிட்டார். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அந்த வளாகத்திற்கு சென்று திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறார்.

மேலும் செய்திகள்