வீட்டு வாசலில் தூங்கியபோது தலையில் அம்மிகல்லைப்போட்டு கொத்தனார் கொலை

மதுரை அவனியாபுரம் பகுதியில் வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த கொத்தனார் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-07-13 22:30 GMT
மதுரை,

மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் வினோத்(வயது 23), கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவிக்கும் கொத்தனார் வினோத்திற்கும் தொடர்பு உள்ளதாக ராஜமாணிக்கம் சந்தேகப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோத் வீட்டின் வாசலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மர்மநபர் அவரது தலையில் அம்மி கல்லை தூக்கிப் போட்டு விட்டு ஓடிவிட்டார். வினோத்தின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் உள்ளே இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வினோத் தலையில் அடிபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வினோத் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வினோத்தின் தாயார் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதில் தன் மகனை ராஜமாணிக்கம் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன் பேரில் போலீசார் ராஜமாணிக்கம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள். கொத்தனார் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்