மரக்காணம் அருகே, மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதல் - 2 வாலிபர்கள் பலி

மரக்காணம் அருகே சாலையோர மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2019-07-14 23:00 GMT
மரக்காணம்,

புதுச்சேரி வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). புதுச்சேரி ராஜ்பவன் பகுதியை சேர்ந்தவர் ஜெகன்மோகன் (25). போட்டோகிராபர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலை ஒரு மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். மரக்காணம் அருகே ஆலப்பாக்கம் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையோரம் நின்றுகொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த காசி என்பவர் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த அருண்குமார், ஜெகன்மோகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் சுக்கு நூறாக நொறுங் கியது.

இதுபற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்தில் பலியான அருண்குமார், ஜெகன்மோகன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்