தஞ்சையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மத்திய அரசின் கூடுதல் செயலாளர் தொடங்கி வைத்தார்

தஞ்சையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத்குமார்பதக் தொடங்கி வைத்தார்.

Update: 2019-07-14 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சை பழையபஸ் நிலையத்தில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் மத்திய அரசு கூடுதல் செயலாளர் பிரமோத்குமார்பதக் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக ஜல் சக்தி அபியான் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்திவுள்ளது. கல்லூரி மாணவ, மாணவிகள் விடுமுறை நாளையொட்டி மழைநீர் சேகரிப்பு நீர் மேலாண்மை விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டின் நீர் பற்றாக்குறை குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள், ஆகையால் தண்ணீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் பெரும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் நம் நாட்டின் எதிர்காலம், அவர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படக்கூடாது. மழைநீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு, நீர் ஆதாரங்களை புதுப்பித்தல், மரக்கன்றுகளை நடவு செய்தல் ஆகிய நடவடிக்கைகள் நீர் மேலாண்மையை செயல்படுத்துவதற்கான திட்டங்களாகும். நாங்கள் திட்டமிட்டுள்ள பெரும்பாலான செயல்பாடுகள் ஏற்கனவே தஞ்சை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளன. ஜல் சக்தி அபியான் தர வரிசை பட்டியலில் தஞ்சை மாவட்டம் நாட்டிலேயே முதல் இடம் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஊர்வலத்துடன் 2 ரதங்களும் சென்றன. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், உதவி இயக்குனர் ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் 50 பேர் என 1000-த்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் பழைய பஸ்நிலையத்தில் தொடங்கி தெற்குஅலங்கம், தெற்குவீதி, மேலவீதி வழியாக அரண்மனை வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்