அன்னவாசல், திருவரங்குளத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

அன்னவாசல், திரு வரங்குளத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2019-07-17 22:45 GMT
அன்னவாசல்,

மழை நீர் சேகரிப்பை வலியுறுத்தியும், நீர்நிலைகளை பராமரிக்கும் வகையிலும், மத்திய அரசு ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தை தொடக்கியுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, எதிர்வரும் மழைக் காலத்துக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஊர்வலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, சங்கர் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இந்த ஊர்வலமானது இருந்திரப்பட்டி ஊராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஊராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தின் போது, மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு, மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர் நிலைகளை பாதுகாத்தல், மரக்கன்றுகள் நடுதல், நிலத்தடி நீரை பெருக்குதல் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியபடி சென்றனர். இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதியம்மாள், தலைமை ஆசிரியர் ராமசந்திரன் மற்றும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செய லாளர் கிருஷ்ணமூர்த்தி செய்திருந்தார்.

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் நீர்மட்டம் உயர்வு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட உதவி திட்ட அலுவலர் வீட்டுவசதி மற்றும் சுகாதாரம் ஸ்ருதி தொடங்கி வைத்தார். திருவரங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். திரு வரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் வரவேற்று பேசினார். திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் கடைவீதி வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் தண்ணீர் சேமிப்பின் அவசியம், மழைநீர் சேகரிப்பு குறித்த கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அசோகன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிபால் பிரான்சிஸ், மகளிர் சுய உதவிக் குழுவினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்