மாவட்டத்தில், வெவ்வேறு இடங்களில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இளம்பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-07-18 22:45 GMT
கிருஷ்ணகிரி, 

பாகலூர் அருகே உள்ள உஸ்தனப்பள்ளியைச் சேர்ந்தவர் சின்னராஜ். இவரது மனைவி ரத்தினம்மா (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் மன முடைந்த ரத்தினம்மா விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரத்தினம்மா இறந்து விட்டார். இது குறித்து அவரது தாய் நாராயணம்மா பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சூளகிரி அருகே உள்ள சிகரலப்பள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (52). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் 4 ஆடுகளை சந்தையில் விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது மனைவி கேட்டார்.

அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் மனமுடைந்த வெங்கடேசன் விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் வெங்கடேசன் இறந்தார். இது குறித்து சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாகரசம்பட்டி அருகே உள்ள பாலேகுளியைச் சேர்ந்தவர் மணி (55). எலக்ட்ரீசியன். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் விஷத்தை குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி இறந்தார்.

இது குறித்து நாகரசம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்