கஞ்சா வியாபாரி சகோதரருடன் பழக்கம்: பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

கஞ்சா வியாபாரி சகோதரருடன் பழகிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2019-07-18 22:15 GMT
திருச்சி,

திருச்சி போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் புவனேஸ்வரி. இவர் திருச்சி பீமநகரில் போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் தங்கி இருந்தார். இவருடைய வீட்டில் கஞ்சா வியாபாரி பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன், மணிகண்டன், இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் போலீசார், அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தங்கி இருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தம்பி ஏற்கனவே கஞ்சா வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியால் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது.

பணியிடை நீக்கம்

இதையடுத்து அவருடைய வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை நடத்தினார்கள். பின்னர் இது குறித்து போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரியை கூடுதல் டி.ஜி.பி. ஷகில்அக்தர் போதைப்பொருள் தடுப்புப்பிரிவில் இருந்து திருச்சி மாநகரத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில் மாநகரத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கி இருந்த போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பையும் காலி செய்ய அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்