சூளகிரி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சூளகிரி அருகே அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றனர்.

Update: 2019-07-19 23:00 GMT
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சேலத்திற்கு சென்று விட்டனர். நஞ்சப்பா மாலை வீட்டுக்கு சென்ற போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8½ பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது. அப்போது வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

இவருடைய பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பார்த்தம்மா. கூலித்தொழிலாளி. இவர் வீட்டை பூட்டி விட்டு நேற்று காலை வேலைக்கு சென்று இருந்தார். மாலை வீட்டுக்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் சூளகிரி போலீசில் புகார் செய்தார்.

அடுத்தடுத்த 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்