பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பரமத்தி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-20 23:15 GMT
பரமத்தி வேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பில்லூரை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 35). இவர் தற்போது கீரம்பூர் அருகே உள்ள புலவர்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் உலகநாதன் நாமக்கல் அருகே உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் பில்லூரில் உள்ள தனது தந்தை நல்லியண்ணனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நேற்று முன்தினம் உலகநாதன் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்று விட்டார். பின்னர் அங்கிருந்து அவர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு உலகநாதன் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அதில் வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகைகள், 15 ஜோடி வெள்ளி கொலுசுகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து உலகநாதன் பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடம் சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த திருட்டு குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்