காதல் திருமணம் செய்த இளம்பெண் சாவு: உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தர்மபுரியில் பரபரப்பு

காதல் திருமணம் செய்த இளம்பெண் இறந்ததால் உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் தர்மபுரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-20 22:00 GMT
தர்மபுரி,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் சத்தியவாணன் (வயது 23). இவரும், கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை சேர்ந்த திவ்யா(19) என்ற பெண்ணும் திருச்செங்கோடு பகுதியில் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்தனர். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த இவர்கள் 2 பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு ஜோலார்பேட்டையில் வசித்தனர்.

இந்த நிலையில் திவ்யா விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை சத்தியவாணன் மற்றும் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திவ்யா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திவ்யாவின் உறவினர்கள் நேற்று தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டனர்.

அவர்கள் திவ்யாவின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும், அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள், போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து திவ்யாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்