பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தியை கைது செய்ததை கண்டித்து திருச்சியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-07-20 23:00 GMT
திருச்சி,

உத்தரபிரதேச மாநிலத்தில் சோன்பத்ரா கிராமத்தில், தாங்கள் பயிர் செய்து வந்த நிலத்தை பழங்குடி விவசாயிகள் விட்டுக் கொடுக்க மறுத்தனர். இதன் காரணமாக, அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். அங்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் வாரணாசி-மிர்சாப்பூர் எல்லையில் நாராண்யூர் என்ற இடத்தில் பிரியங்கா காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். உடனே அவர் அங்கு நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் திருச்சி சத்திரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான அருணாசலம் மன்றம் முன்பு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் எம்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலைப்பிரிவு மாநில துணைத்தலைவர் பெஞ்சமின் இளங்கோ, சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் மன்சூர் அலி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர்கள் ராஜா டேனியல்ராய், சிவா, மீனவர் அணி மாவட்ட தலைவர் தனபால், முன்னாள் மேயர் சுஜாதா, மாவட்ட துணைத்தலைவர்கள் முரளி, ராஜகோபால், பொருளாளர் ராஜாநசீர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜி.கே.முரளி, ரெக்ஸ், மகளிர் அணி மாநில செயலாளர் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுபோல், நேற்று நெ.1டோல்கேட் ரவுண்டானா அருகே திருச்சி வடக்கு மாட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் திருச்சி கலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் சிவசண்முகம், செயலாளர் ஞானகுரு, மண்ணச்சநல்லூர் வட்டாரத்தலைவர் தென்றல்கார்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கொள்ளிடம் போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர்.

மேலும் செய்திகள்