குடிமராமத்து பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன்பு முடிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

குடிமராமத்து பணிகளை மழைக்காலம் தொடங்கும் முன்பு முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவிட்டுள்ளார்.

Update: 2019-07-20 23:00 GMT
கல்லக்குடி,

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ரெட்டிமாங்குடி, பெருவளப்பூர், வந்தலைக் கூடலூர், பி.சங்கேந்தி ஆகிய கிராம ஊராட்சிகளில் ரூ.1 கோடியே 86 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் 20 வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வந்தலைக் கூடலூர் கிராம ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, கனிமவள அறக்கட்டளை நிதியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம், ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். பின்னர் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.68½ லட்சம் மதிப்பில் என்.சங்கேந்தி முதல் பி.சங்கேந்தி வரை நடைபெற்றுவரும் தார்ச்சாலை பணிகள், செயல்படா சேமிப்பு கணக்கு நிதியில் இருந்து ரூ.48 லட்சம் மதிப்பில் பி.சங்கேந்தி முதல் குமுளூர் வரை நடைபெற்று வரும் தார்சாலை பணிகள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து குடிமராமத்து திட்டத்தின் கீழ் லால்குடி வட்டம் பம்பரம்சுத்தி, வடக்கு அய்யன் வாய்க்கால் குறுக்கே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் படுகை அணை புனரமைக்கும் பணி, வடக்கு அய்யன் வாய்க்காலின் குறுக்கே ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் சவுக்கடி படுகை அணை புனரமைக்கும் பணி ஆகியவற்றை அவர் ஆய்வு செய்தார். இப்பணிகள் அனைத்தும் தரமானதாகவும், விரைவாகவும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்