கிணறு தோண்டும் பணியின் போது தலையில் கல் விழுந்து விவசாயி சாவு மகன்கள் கண் முன்னே பரிதாபம்

பொம்மிடி அருகே கிணறு தோண்டும் பணியின் போது தலையில் கல் விழுந்து மகன்கள் கண் முன்னே விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-07-21 22:45 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள கொண்டகரஅள்ளி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). விவசாயி. இவருடைய நிலத்தில் உள்ள கிணறு கடும் வறட்சியின் காரணமாக வறண்டு விட்டது. இதனால் அவர் கிணற்றை ஆழப்படுத்த முடிவு செய்தார். இந்த பணியில் முத்துசாமி மற்றும் அவருடைய மகன்கள், உறவினர்கள் என 5 பேர் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று இவர்கள் 5 பேரும் கிணற்றின் உள்ளே இறங்கி வேலை செய்தனர். அப்போது திடீரென கிணற்று சுவரில் இருந்து ஒரு கல் பெயர்ந்து முத்துசாமியின் தலை மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தனது மகன்கள் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முத்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட போது தலையில் கல் விழுந்து விவசாயி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்