மயிலாடுதுறையில் தீ விபத்து: டீக்கடை- 4 வீடுகள் எரிந்து நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்

மயிலாடுதுறையில் ஏற்பட்ட தீ விபத்தில் டீக்கடை மற்றும் 4 வீடுகள் எரிந்து நாசமடைந்தன. இதில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2019-07-21 22:15 GMT
மயிலாடுதுறை,

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள தருமபுரம் ரோடு எல்.பி.நகர் ஆலமரத்தடியை சேர்ந்தவர் காமராஜ்(வயது55). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை இவரது டீக்கடையில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியது. இதனால் இவரது டீக்கடையி்ல் பற்றிய தீ அருகே இருந்த மாலா, குமார், முருகன், ராஜேந்திரன், ஆகியோரின் வீடுகளுக்கும் பரவியது. இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன் மற்றும் தீயணைப்புவீரர்கள் சம்பவ இடத்துக்குசென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

ரூ.5 லட்சம் பொருட்கள்

இருப்பினும் டீக்கடை மற்றும் வீடுகளில்இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இது குறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மயிலாடுதுறை தாசில்தார் இந்துமதி, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் தலா ரூ.5 ஆயிரம், அரிசி, மண்எண்ணெய், வேட்டி, சேலைகளை நிவாரணமாக வழங்கினர்.

மேலும் செய்திகள்