கவரப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

கவரப்பாளையம் மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2019-07-21 22:30 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலின் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருள செய்து தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேர் மீண்டும் அதன் நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அம்மன் வீதி உலா

இதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) இரவு சம்பூர்ண அரிச்சந்திரா நாடகம் தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 3 நாட்கள் நடைபெற உள்ளது. வருகிற 25-ந் தேதி மதியம் கூழ் ஊற்றுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. பின்னர் அன்று இரவு அம்மனுக்கு காப்பு அவிழ்த்தலுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மைகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்