குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு விலையில்லா சலவை பெட்டிகள் கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்

நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 710 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

Update: 2019-07-22 23:00 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 570 மனுக்களை கலெக்டரிடம், பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியான நபர் களுக்கு நலத்திட்ட உதவிகளை உடனுக்குடன் வழங்கிட உத்தரவிட்டார்.

மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரத்து 710 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை கலெக்டர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) இலாஹிஜான் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்