தனித்தனி சம்பவத்தில் மாணவி உள்பட 2 பேர் தற்கொலை

தனித்தனி சம்பவத்தில் மாணவி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2019-07-22 22:45 GMT
சங்கராபுரம், 

சங்கராபுரம் அருகே உள்ள பாச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவரது மனைவி ரோஸ் பிரியா. இவர்களுடைய மகள் மகாலட்சுமி (வயது 19). பிளஸ்-2 படித்துள்ள இவர் கல்லூரியில் சேர்வதற்காக, சங்கராபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். நேற்று முன்தினம் மகாலட்சுமி வீட்டு வேலை செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ரோஸ் பிரியா, கல்லூரி செல்லும் வரை வீட்டு வேலையை செய்யுமாறு கூறி மகாலட்சுமியை திட்டியதாக கூறப்படுகிறது.

இதில் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மகாலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தங்கதுரை, சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

திண்டிவனம் அருகே உள்ள புறங்கரை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி புஷ்பா (வயது 28). சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புஷ்பா விஷத்தை குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி புஷ்பா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புஷ்பா உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்