வேப்பூரில் மரத்தில் மினிலாரி மோதல்; தொழிலாளி பலி

வேப்பூரில் மரத்தில் மினிலாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-07-22 22:45 GMT
2 பேர் படுகாயம்

வேப்பூர், 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஆராகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் (வயது 30), மினிலாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் மினிலாரியில் நெல்அறுவடை எந்திரத்தை ஏற்றிக்கொண்டு சேத்தியாத்தோப்புக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் தொழிலாளர்களான விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பைத்தந்துறையை சேர்ந்த பாண்டித்துரை(24), மணிகண்டன் ஆகியோர் சென்றனர்.

வேப்பூர் கூட்டுரோட்டில் நள்ளிரவில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி, சாலையில் தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது. இதில் மினிலாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் பாண்டித்துரை உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜவேல், மணிகண்டன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பாண்டித்துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்