மணப்பாறை அருகே திருவிழா நடந்த கோவிலுக்கு பூட்டு; இருதரப்பினர் இடையே வாக்குவாதம்

மணப்பாறை அருகே திருவிழா நடந்த கோவிலுக்கு பூட்டு; இருதரப்பினர் இடையே வாக்குவாதம் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

Update: 2019-07-28 23:00 GMT
மணப்பாறை,

மணப்பாறையை அடுத்த கோட்டைக்காரன்பட்டி மற்றும் கொட்டப்பட்டி பகுதியில் ஒரு சமூகத்தினரால் கோவில் திருவிழா கொண்டாடப்படும். இதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட்டைக்காரன்பட்டியில் நடந்த கோவில் திருவிழா நிறைவு பெற்றது. ஆனால் இந்த விழாவிற்கு சிலர் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொட்டப்பட்டியில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. அந்த விழாவில் ஏற்கனவே கோட்டைக்காரன்பட்டியில் கலந்து கொள்ளாத சிலர், தங்களை அழைக்கவில்லை என்று கூறி கோவில் வீட்டிற்கு பூட்டு போட்டனர். இதனால் ஒரு சமூகத்தை சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திருவிழா நடத்தியவர்கள், தங்களை தாக்க முயற்சித்து கோவில் வீட்டிற்கு பூட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மணப்பாறை- குளித்தலை சாலையில் கொட்டப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்