மூதாட்டி கொலை வழக்கில் உறவினர் கைது

மூதாட்டி கொலை வழக்கில் உறவினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-28 22:15 GMT
திருப்போரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வேணுகோபால். இவரது மனைவி பாப்பம்மாள் என்ற கெங்கம்மாள் (வயது 70). கணவர் இறந்துவிட்டார். இவருக்கு சங்கர், டில்லி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர்.

ஒரு மகள் மற்றும் டில்லி என்ற மகனும் இறந்து விட்டனர். இதையடுத்து கெங்கம்மாள் டில்லியின் மனைவியும் மருமகளுமான பார்வதியுடன் வசித்து வந்தார். கடந்த 25-ந்தேதி வெளியே சென்ற கெங்கம்மாள் வீடு திரும்பவில்லை. அவரை யாரோ மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றது தெரியவந்தது. உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். கெங்கம்மாள் அந்த பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதைத்தொடர்ந்து காயார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கெங்கம்மாளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றவர் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (45) என்பது தெரியவந்தது.

கெங்கையம்மாளை அழைத்து கொண்டு ரமேஷ் மோட்டார்சைக்கிளில் காட்டூரில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளார். டீ குடித்து விட்டு திரும்பும்போது வெண்பேடு மலை பகுதி சாலை ஓரமாக கெங்கம்மாளை விட்டு விட்டு ரமேஷ் நீண்ட நேரம் கழித்து வந்தார். தாமதமாக வந்ததால் ஆத்திரம் அடைந்த கெங்கம்மாள் ரமேஷை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. குடி போதையில் இருந்த ரமேஷ் கெங்கம்மாளின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்