லட்சக்கணக்கான ரூபாய் மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

பெரம்பலூர் மாவட்டம், ஆலுத்தூர் தாலுகா கொளத்தூர் கிராம மக்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர்.

Update: 2019-07-29 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், ஆலுத்தூர் தாலுகா கொளத்தூர் கிராம மக்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஒரு நிறுவனத்தின் பெயரை கூறி, எங்கள் கிராமத்தை சேர்ந்த பலரிடம் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்தினால், அதற்கு வட்டியோடு அதிக தொகையாக திரும்பி தருவதாக கூறி லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்தார். ஆனால் அந்த பெண் தவணை காலம் முடிந்தும், வட்டியோடு சேர்த்து, கட்டிய அசல் பணத்தையும் திருப்பி தராமல் மோசடியில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் கேட்டபோது, எப்படியாவது அந்த பணத்தை திருப்பி தருவதாக கூறினார். மேலும் அவரது கணவர் மற்றும் பெற்றோர் பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டனர். இந்த நிலையில் அந்த பெண் விபத்து ஒன்றில் இறந்து விட்டார். தற்போது அந்த பணத்தை திருப்பி தருமாறு இறந்து போன பெண்ணின் கணவர், பெற்றோரிடம் கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி தர முடியாது என்று கூறிவிட்டனர். எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து அந்த பெண் குடும்பத்தாரிடம் இருந்து எங்கள் பணத்தை திரும்ப பெற்று தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பான மனு ஒன்றினை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் கொடுத்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்