கிருஷ்ணகிரி அருகே பயங்கரம்: விவசாயி கொலை - உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீச்சு

கிருஷ்ணகிரி அருகே விவசாயியை கொலை செய்த மர்ம கும்பல், அவரது உடலில் கல்லை கட்டி கிணற்றில் வீசி சென்றது.

Update: 2019-07-30 23:25 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அருகே விவசாயியை கொலை செய்யப்பட்ட இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கலேரி அருகே உள்ளது வட்டிகானப்பள்ளி. இந்த பகுதியில் முத்தம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த பகுதியில் உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலை ஒருவர் பிணமாக கிடப்பதை அந்த பகுதி பொதுமக்கள் பார்த்தனர்.

அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்த்தனர். அப்போது கிணற்றில் ஆண் ஒருவர் தலையில் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். அவரது உடலில் பாறாங்கல் ஒன்று வைத்துகயிற்றால் கட்டப் பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி அருகே உள்ள கங்கலேரி பக்கமுள்ள பூதிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமு என்கிற ராமன் (வயது 42) விவசாயி என தெரிய வந்தது.

அவரது தலையில் மர்ம நபர்கள் கல்லைப்போட்டு கொலை செய்து பின்னர் உடலில் கல்லை வைத்து கயிற்றால் கட்டி கிணற்றில் வீசி சென்றுள்ளார்கள்.

இதைத் தொடர்ந்து போலீசார் ராமுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் விவசாயியை கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்