கள்ள ரூபாய் நோட்டுகள் கொடுத்து ஆடுகளை வாங்கிச்சென்ற வியாபாரி - விவசாயி அதிர்ச்சி

காட்டுமன்னார்கோவில் அருகே கள்ள ரூபாய் நோட்டுகள் கொடுத்து ஆடுகளை வியாபாரி ஒருவர் வாங்கிச்சென்றதால் விவசாயி அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2019-08-03 23:14 GMT
காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கொண்டாயிருப்பை சேர்ந்தவர் பழனிவேல்(வயது 45). விவசாயியான இவர், தான் வளர்த்து வந்த 5 ஆடுகளை விற்பனை செய்வதற்காக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் நடைபெற்ற வாரச்சந்தைக்கு ஓட்டிச்சென்றார். அப்போது வியாபாரி ஒருவர், பழனிவேலுவிடம் விலை பேசி ஆடுகளை வாங்கினார். அதற்காக அந்த வியாபாரி ரூ.14 ஆயிரத்து 700 கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பழனிவேல், ஏற்கனவே தான் அடகு வைத்திருந்த நகையை மீட்பதற்காக அடகுக்கடைக்கு சென்றார். அதனை கடைக்காரர் வாங்கி பார்த்தபோது, 7 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதில் 5 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் ஒரே நம்பராகவும், 2 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டு ஒரே நம்பராகவும் இருந்தது. இதனால் பழனிவேல் அதிர்ச்சி அடைந்தார். இந்த கள்ள ரூபாய் நோட்டுகளை என்ன செய்வதென்று தெரியாமல் அவர் புலம்பினார்.

மேலும் செய்திகள்