சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் 626 பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் வட்டார அளவில் சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Update: 2019-08-07 22:30 GMT
அரியலூர்,

எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்திலுள்ள 6 ஒன்றியங்களில் செயல்பட்டு வரும் 626 பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்களில் வட்டார அளவில் சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் தேர்ந் தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட அளவில் விருதுகள் வழங்கும் பொருட்டு அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் சமையல் போட்டி நடத்தப்பட்டது. அடுப்பில்லாத சமையல், எண்ணெய் இல்லாத சமையல், இயற்கை உணவு, ஆரோக்கியமான உணவு, சிறு தானியங்களை மட்டும் பயன்படுத்தி உணவு, சிற்றுண்டி, மாலை உணவு ஆகிய தலைப்புகளில் போட்டி நடந்தது. போட்டியை, அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் சத்தியநாராயணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) மல்லிகா, அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மற்றும் அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் முன்னிலையில் போட்டி நடத்தப்பட்டது. 6 ஒன்றியங்களிலிருந்தும் 9 சத்துணவு சமையலர்கள் மற்றும் 9 சமையல் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் சமைத்த உணவுகளை பள்ளி மாணவ-மாணவிகள் சாப்பிட்டு சிறந்த உணவு எது என்று தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களில் வருகிற சுதந்திர தினவிழாவில் ஒரு பணியாளருக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 3 பணியாளர்களுக்கு ரொக்கப்பரிசும், பாராட்டு சான்றிதழும் கலெக்டர் வழங்குகிறார்.

மேலும் செய்திகள்