அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான படுக்கையில் உறங்கும் நாய்கள் நோயாளிகள் அச்சம்

பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கான படுக்கையில் படுத்து உறங்கும் தெருநாய்களால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2019-08-07 22:45 GMT
பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ஏராளமானோர் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கடந்த ஜூன் மாதம் பரமத்தி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த ஹரிஹரன் மகள் புனிதவள்ளி (வயது 4) என்பவள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். அப்போது அவளை அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்கள் கடித்ததில் காயம் அடைந்தாள்.

இந்தநிலையில் தற்போது தொடர்ந்து அரசு மருத்துவ மனைக்குள் தெருநாய்கள் சுற்றி திரிவதாகவும், இரவு நேரங்களில் மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகளின் படுக்கையிலேயே நாய்கள் படுத்து உறங்குவதாகவும் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தெரிவித்தனர். எனவே மருத்துவமனைக்குள் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க பரமத்திவேலூர் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்நோயாளிகளும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

படுக்கையில் உறக்கம்

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் நாய்கள் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்திற்குள்ளே சுற்றித்திரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை உள்நோயாளிகளின் படுக்கையில் படுத்து 2 தெருநாய்கள் படுத்து உறங்கி கொண்டு இருந்தது. இதைப்பார்த்த நோயாளிகள் அந்த நாய்களை துரத்துவதற்கு முற்பட்டனர். ஆனால் அந்த நாய்கள் நோயாளிகளையும், பொதுமக்களையும் கடிக்கும் விதத்தில் அச்சுறுத்தியது. இதனால் நோயாளிகள் அச்சத்துடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்