கடலில் கொன்று வீசப்பட்ட தொழில் அதிபர் உடலை தேடும் பணி தீவிரம்

கடலில் கொன்று வீசப்பட்ட தொழில் அதிபர் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

Update: 2019-08-08 22:30 GMT
அடையாறு,

சென்னை அடையாறை சேர்ந்தவர் சுரேஷ் பரத்வாஜ் (வயது 50). தொழில் அதிபரான இவரிடம், அவரது வீட்டு வேலைக்கார பெண்ணுடன் சேர்த்து வைப்பதாக கூறி அடையாறை சேர்ந்த வக்கீல் பிரீத்தி என்பவர் ரூ.65 லட்சம் வரை பறித்தார்.

இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஜூன் மாதம் 21-ந் தேதி வக்கீல் பிரீத்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேர் சேர்ந்து காசிமேடு கடலில் சுரேஷ் பரத்வாஜை துடுப்பு கட்டையால் அடித்துக்கொன்று உடலை கடலில் வீசினர்.

இந்த வழக்கில் கூலிப்படையை சேர்ந்த பிரகாஷ் உள்பட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த வக்கீல் பிரீத்தியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் கொல்லப்பட்ட சுரேஷ் பரத்வாஜ் உடல் இதுவரை கிடைக்காததால் இந்த வழக்கு பலவீனமாக உள்ளதாகவும், குற்றவாளிகள் எளிதில் தப்பிவிட வாய்ப்புள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொலை செய்து கடலில் வீசப்பட்ட சுரேஷ் பரத்வாஜின் உடலை நாங்கள் தொடர்ந்து தீவிரமாக தேடி வருகிறோம். அதேவேளையில் பல வழக்குகளில் கொலை செய்யப்பட்டவரின் உடல் கிடைக்காத நிலையிலும் சந்தர்ப்ப சாட்சியங்களை வைத்து காவல்துறையால் அந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நாங்கள் விஞ்ஞான ரீதியில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து உள்ளோம்.

இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் முக்கிய பங்காற்றுகின்றது. மேலும் நேரடி சாட்சியங்கள், சந்தர்ப்ப சாட்சியங்கள் மற்றும் பல முக்கிய ஆதாரங்கள் இந்த வழக்கில் பலம் சேர்த்துள்ளது. எனவே இந்த கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு 100 சதவீதம் தண்டனை வாங்கித்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரீத்தியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்