அருப்புக்கோட்டை அருகே, கழுத்தை நெரித்து பெண்ணை கொன்ற கள்ளக்காதலன் - பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் ஆத்திரம்

பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறி கழுத்தை நெரித்து பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-08 23:30 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டி அருகே உள்ள கட்டகஞ்சம்பட்டியை சேர்ந்தவர் திருமுருகன். பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி அங்காள ஈசுவரி (வயது 35).

இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் மயங்கி கிடந்து உயிருக்கு போராடினார். அப்போது அங்கு வந்த அவருடைய தந்தை காளிமுத்து, உடனே அங்காள ஈசுவரியை சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்காள ஈசுவரியின் உடல் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தனது மகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து காளிமுத்து, அருப்புக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அங்காள ஈசுவரிக்கும், அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அடைக்கலம் (45) என்பவருக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இருவரும் அவ்வப்போது ரகசியமாக சந்தித்துள்ளனர். இந்தநிலையில் அங்காள ஈசுவரி, கள்ளக்காதலன் அடைக்கலத்திடம் ரூ.2 லட்சம் வரை பணம் பெற்றதாகவும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக அவர்களுக்குள் சமீப காலமாக பிரச்சினை இருந்தது. சம்பவத்தன்றும் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கள்ளக்காதலன் அடைக்கலம் ஆத்திரம் அடைந்து, அங்காள ஈசுவரியை கழுத்தை நெரித்துள்ளார். இதில் மயக்கம் அடைந்த அங்காள ஈசுவரி உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அடைக்கலத்தை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்