காரில் கடத்தப்பட்ட 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது

குத்தாலம் அருகே காரில் கடத்தப்பட்ட 1,536 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-08-10 23:00 GMT
குத்தாலம்,

குத்தாலம் அருகே பாலையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கத்தரிமூலை கிராமம் பொறையாறு-ஆடுதுறை சாலையில் நேற்று மயிலாடுதுறை தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ஏராளமான அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரைக்காலில் இருந்து கும்பகோணத்திற்கு காரில் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் மதுபாட்டில்களை கடத்தி வந்தது காரைக்கால் நேரு நகர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் அற்புதராஜ் (வயது 33) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அற்புதராஜை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1,536 மதுபாட்டில்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்