அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி

அமராவதி அணையில் இருந்துபாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2019-08-11 22:45 GMT
உடுமலை,

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளை நீராதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழை காலங்களில் நீர்வரத்து ஏற்படுகின்றது.அதனை அடிப்படையாக கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்று வருகின்றன.

பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அத்துடன் அமராவதி ஆற்றை ஆதாரமாக கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில மாதங்களாக கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதன் காரணமாக அங்குள்ள சிற்றாறுகள் மற்றும் ஓடைகள் முற்றிலுமாக வறண்டு விட்டன. இதனால் அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து நின்று போனது. மேலும் பாசன நிலங்களுக்கு சுழற்சி முறையில் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபடமுடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

அத்துடன் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளும் தேவையான அளவு உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தன. இதையடுத்து வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவையை நிறைவு செய்து கொள்வதற்காக அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி அமராவதி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள பாம்பாறு, தேனாறு, சின்னாறு, மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நாளொன்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடிக்குள் ஏற்ற இறக்கமாக நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதையடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு மழையின் தாக்கம் குறைந்து விட்டதால் அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் குறைந்து விட்டது. இதனால் அணை அதன் முழுகொள்ளளவை எட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமராவதி அணையில் இருந்து பாசனத்துக்கு பிரதான கால்வாய் வழியாக தண்ணீரை திறந்து விட உத்தரவிட்டார். இந்த சூழலில் நேற்று காலை அணையில் இருந்து பிரதான கால்வாய் மூலமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்படி நேற்று முதல் வருகின்ற 25-ந்தேதி வரையிலும் அதாவது 15 நாட்களுக்கு 570 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகாவில் 1781 ஏக்கரும், மடத்துக்குளம் தாலுகாவில் 11 ஆயிரத்து 469 ஏக்கரும், தாராபுரம் தாலுகாவில் 12 ஆயிரம் ஏக்கரும் ஆக மொத்தம் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் அமராவதி அணை உதவிப்பொறியாளர் பாபு உள்ளிட்ட பொதுப்பணித்துறையினர் கலந்து கொண்டனர்.

நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் மொத்த நீர் இருப்பில் 75.40 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,989 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு பிரதான கால்வாயில் 440 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்