கூடலூர் அருகே பச்சிளம் குழந்தை சாவில் திருப்பம், தாய் திடீர் கைது - பரபரப்பு வாக்குமூலம்

கூடலூர் அருகே பச்சிளம் குழந்தை சாவில் திடீர் திருப்பமாக தாய் கைது செய்யப்பட்டார். போலீசில் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-08-13 22:30 GMT
கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மகள் சப்னாமோல் (வயது 19). இவருக்கும் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த முஜீப்ரகுமானுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இதனால் கணவருடன் சப்னாமோல் பாலக்காட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் சப்னாமோல் கர்ப்பமாக இருந்தார். ஆனால் திருமணம் ஆகி 4 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் அழகான பெண் குழந்தையை பெற்றார்.

இந்த நிலையில் தனது பெற்றோர் வீட்டுக்கு சப்னாமோல் பெண் குழந்தையுடன் சில தினங்களுக்கு முன்பு வந்தார். நேற்று முன்தினம் பிறந்து 28 நாட்களான பச்சிளம் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சுனீல் நியூகோப் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூச்சு திணறி பச்சிளம் குழந்தை இறந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சப்னாமோலிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை கொலை செய்ததாக தாயை போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், திருமணம் ஆகி 4 மாதங்களில் குழந்தை பிறந்ததால் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போர்வையால் குழந்தையின் முகத்தை அழுத்தி கொலை செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையை பெற்ற தாய் கொலை செய்த சம்பவம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்