சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதல்: நிதி நிறுவன அதிபர் பலி

சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.

Update: 2019-08-13 22:36 GMT
பல்லடம்,

பல்லடத்தில் சாலையின் மையத்தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நிதி நிறுவன அதிபர் பலியானார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரம் சேகாம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது26). பல்லடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் நேற்று காலை சேகாம்பாளையத்தில் இருந்து காமநாயக்கன்பாளையத்திற்கு பணம் வசூல் செய்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் சென்றார்.

கரையாம்புதூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் மையத்தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளுடன் தமிழ்ச்செல்வன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தமிழ்ச்செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த தமிழ்ச்செல்வனுக்கு ராணி (20) என்ற மனைவியும், யுகன் என்ற 4 மாத ஆண் குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்