பட்டப்படிப்பு படிக்க முடியாததால் வருத்தம், தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை

தவளக்குப்பம் அருகே பி.காம். பட்டப்படிப்பு படிக்க முடியாததால் மனவருத்தம் அடைந்த மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-08-15 22:00 GMT
பாகூர்,

தவளக்குப்பம் அருகே நல்லவாடு ரோடு பிள்ளையார் திட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மனைவி கலைவாணி. இவர்களின் மகன் சோலை முருகன் (வயது 18). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலை இறந்துவிட்டார். அதனால் கலைவாணி கட்டிட வேலை செய்து மகனை படிக்க வைத்தார். அவர் தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார். ஆனால் குறைவான மதிப்பெண்ணே பெற்றிருந்தார்.

இந்த நிலையில் சோலை முருகன் பி.காம் படிப்பதற்காக அரசு கல்லூரியில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவர் பிளஸ்-2வில் குறைவான மதிப்பெண்ணே பெற்றிருந்ததால், பி.காம் படிப்பதற்கு கல்லூரியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

அதனால் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கலைவாணி வழக்கம்போல் கட்டிட வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் அவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது வீட்டில் சோலை முருகன் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அதுகுறித்து தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சோலை முருகன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பி.காம். பட்டப்படிப்பு படிக்க முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்