கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து, முதல்-அமைச்சர் பங்கேற்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் கிரண்பெடி, முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

Update: 2019-08-15 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் மாளிகையில் குடியரசு தினம், சுதந்திர தினங்களில் கவர்னர் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுவை கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி நேற்று மாலை முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.

இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டசபை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி (காங்கிரஸ்), வெங்கடேசன் (தி.மு.க.), சங்கர் (பா.ஜனதா) ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில், கவர்னர் மாளிகையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு பிரிவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரி பாஸ்கரை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது. தலைமை செயலர் அஸ்வனி குமார், கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, புதுவை பல்கலைக்கழக துணை வேந்தர் குர்மீத்சிங் மற்றும் அரசு செயலர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கேந்திர வித்யாலயா பள்ளி மாணவிகளின் இசை நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் மாளிகைக்கு வந்திருந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

மேலும் செய்திகள்