மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதல், படுகாயம் அடைந்த விவசாயி பலி

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த விவசாயி பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-08-16 22:15 GMT
வடமதுரை,

கரூர் மாவட்டம், கடவூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). இவர் அய்யலூர் அருகே உள்ள சுக்காம்பட்டியில் மளிகைக்கடை வைத்துள்ளார். கடந்த 13-ந் தேதி மாலை சுக்காம்பட்டியை சேர்ந்த விவசாயி மாரியப்பன் என்பவருடன் பழனிச்சாமி மோட்டார் சைக்கிளில் அய்யலூருக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை பழனிச்சாமி ஓட்டினார். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கடவூர் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியே வேகமாக சென்ற வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். 

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாரியப்பன் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த மாரியப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்த வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்