தியாகிகள் ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் - முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் தியாகிகள் ஓய்வூதியம் ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

Update: 2019-08-16 23:30 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கம்பன் கலையரங்கில் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு தியாகிளுக்கு தேநீர் விருந்து அளித்தார். அதைத்தொடர்ந்து அவர், தியாகிகளை கவுரவித்து இனிப்புகள் மற்றும் பரிசு கூப்பன்களை வழங்கினார். விழாவுக்கு அன்பழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

தமிழகம்-புதுவையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. தமிழகத்தில் தியாகிகளுக்கு ஓய்வூதியமாக ரூ.16 ஆயிரம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் ஏராளமான கனிம வளங்கள் நிறைந்துள்ளது. மேலும் தமிழக அரசுக்கு மத்திய அரசு 42 சதவீதம் நிதி வழங்கி வருகிறது. வருமானங்களும் அதிகமாக கிடைக்கிறது. எனவே தியாகிகளுக்கு ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியை பொருத்தமட்டில் வணிக வரி, கலால் வரி மட்டுமே வருமானமாக உள்ளது. புதுவை அரசுக்கு மத்திய அரசு கடந்த காலங்களில் 90 சதவீதம் நிதி அளித்து வந்தது. தற்போது படிப்படியாக குறைந்து வெறும் 26 சதவீதம் மட்டுமே நிதி வழங்குகிறது.

மத்தியில் ஆளும் மோடி அரசு ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே மதம், ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டங்களை கொண்டு வருகிறது. மத்திய அரசு நமக்கான நிதியை தருவதில்லை. அவற்றை போராடி பெற வேண்டியதுள்ளது. கவர்னர் கிரண்பெடி, அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு முட்டுக்கட்டை போடுகிறார். எதிர்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை சமாளித்து மக்களுக்காகவும், மக்கள் நல திட்டங்களையும் ஆளும் அரசு செயல்படுத்தி வருகிறது. நாங்கள் ஒன்றும் சொகுசு வாழ்க்கை வாழவில்லை.

புதுவை தியாகிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க எங்களுக்கு விருப்பம் உள்ளது. தியாகிகளுக்கு தற்போது ரூ.8 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதனை ரூ.9 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் தியாகிகள், அவர்களின் குடும்பத்தார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குனர் வினயராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்