முல்லைப்பெரியாறு கால்வாயில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் பெற நடவடிக்கை - அமைச்சர் பாஸ்கரன் தகவல்

சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு முல்லைப் பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் பெற முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Update: 2019-08-17 22:30 GMT
சிவகங்கை,

அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சார்பில் சென்னையில் இருந்து சிவகங்கைக்கு படுக்கை வசதியுடன் கூடிய புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன.

இதன் தொடக்கவிழா சிவகங்கை பஸ் நிலையத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

தமிழக அரசு சார்பில் ஏற்கனவே இயங்கி வந்த பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்களை முதல்- அமைச்சர் பழனி சாமி வழங்கினார். அதன் சேவை தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடியாக சிவகங்கை மாவட்டத்தில் குடிமராமத்து பணி முன்னதாகவே தொடங்கி விட்டது. பெரும்பாலான கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர் வாரப்பட்டு மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலை மாவட்ட நிர்வாகம் திறம்பட செய்துள்ளது.

மேலும் கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு பாசனத்துக்காக முன் கூட்டியே முல்லைப்பெரியாறு கால்வாய் மூலம் தண்ணீர் பெறுவதற்கான முயற்சிகளை ஆரம்பித்து விட்டோம். மேலும் அனைவரும் மழை வர வேண்டும் என கடவுளை வேண்டிக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறி னார்.

மேலும் செய்திகள்