காசிமேட்டில் இருந்து சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்

காசிமேட்டில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 25 பேரை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்து சென்றனர்.

Update: 2019-08-18 22:00 GMT
திருவொற்றியூர்,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு அருள் மொழி, வேளாங் கண்ணி, கோபிநாத், திலீப்குமார் ஆகியோருக்கு சொந்தமான 4 விசைப்படகுகளில் 35 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகில் உள்ள சீனிவாசபுரம் என்ற பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அங்குவந்த ஆந்திர மாநில மீனவர்கள், தமிழக மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த காரைக்கால் மீனவர்களின் படகுகளை பிடிக்க காசிமேடு மீனவர் திலீப்குமாருடைய விசைப்படகை ஆந்திர மீனவர்கள் எடுத்துச்சென்றனர்.

இதை தெரிந்து கொண்ட காரைக்கால் மீனவர்கள், ஆந்திர மீனவர்கள் சென்ற விசைப்படகை இடித்து தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் திலீப்குமாரின் விசைப்படகு சேதமடைந்தது. எனவே அந்த படகையும், அதில் இருந்தவர்களையும் விட்டு விட்டு மற்ற 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்து சென்றனர்.

இதையடுத்து சேதமடைந்த திலீப்குமார் விசைப்படகு மூலம் காசிமேடு திரும்பி வந்த மீனவர்கள், இதுபற்றி காசிமேடு மீன் வளத்துறை உதவி இயக்குனர் வேலன் மற்றும் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்கள் 25 பேரையும் மீட்க மீன் வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்