சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பெட்டிக்கடைக்காரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பெட்டிக்கடைக்காரர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2019-08-18 22:00 GMT
கடலூர்,

காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூர் காளியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் செல்வகாந்தன் (வயது 49). இவர் ஊரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடைக்கு 25.6.2019 அன்று மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி வந்தார். அந்த சிறுமிக்கு செல்வகாந்தன் தின்பண்டம் கொடுத்து, அருகில் உள்ள கழிவறைக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.

இது பற்றி அந்த சிறுமியின் தாய் சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகாந்தனை கைது செய்தனர். அதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் விதமாக அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து செல்வகாந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புசெல்வன் உத்தரவிட்டார். அதன்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் செல்வகாந்தனை கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

மேலும் செய்திகள்