திருவெண்ணெய்நல்லூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-08-18 23:00 GMT
அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 70). முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசித்து வரும் தனது மகளின் வீட்டிற்கு சென்றார்.

நேற்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி செல்போன் மூலம் தமிழரசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசன் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் நகை, ரூ.10 ஆயிரத்தை காணவில்லை. மேலும் வீட்டில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணினி, எல்.இ.டி, டி.வி. ஆகியவற்றையும் காணவில்லை.

இதுகுறித்து தமிழரசன் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், தமிழரசன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் உள்பட ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் உள்ளிட்ட பொருட் களை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்