அத்தாணியில் குடிநீர் சீராக வினியோகிக்ககோரி பொதுமக்கள் சாலை மறியல்

அத்தாணியில் குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

Update: 2019-08-19 22:30 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சி பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, மேல்நிலை தொட்டியில் ஏற்றி குழாய் வழியாக வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பேரூராட்சிக்கு உட்பட்ட 5, 6, 7, 8, 9, 11-வது வார்டு பொதுமக்களுக்கு கடந்த 5 நாட்களாக தண்ணீர் வினியோகிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் தண்ணீர் வழங்கப்படாத வார்டை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் நேற்று காலை 11.15 மணி அளவில் அத்தாணி மூனு ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அதனால் அந்த வழியாக எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த ஆப்பக்கூடல் போலீசார் மற்றும் அத்தாணி பேரூராட்சி செயல் அதிகாரி ராமகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது அவர்கள் ‘பவானி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருகிறது. அதனால் நீர் உறிஞ்சும் இடத்தில் குழாயில் சேறு அடைத்துவிட்டதால் தான் தண்ணீர் வினியோகிக்க முடியவில்லை. உடனே சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்‘ என்று உறுதி அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு பகல் 11.45 மணி அளவில் கலைந்து சென்றார்கள்.

இந்த சாலை மறியலால் அத்தாணி மூனு ரோடு வழியாக சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்